Header Ads

வளைகுடாவில் அமைதியை காக்குமாறு சீனா கோரிக்கை

கொரிய வளைகுடாவில் ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான பதற்ற நிலமையுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் அமைதி காக்குமாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

கொரிய வளைகுடாவை நோக்கி பயணிக்கும் அமெரிக்காவின் யுத்த விமானத் தாங்கி போர்க் கப்பல் படையணியை தாக்கி மூழ்கடிப்பதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்த நிலையிலேயே சீன அதிபர் ஷீ ஜின்பின் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் கடுமையான தடைகளையும் அச்சுறுத்தல்களையும் மீறி ஏவுகணைப் பரிசோதனைகளை நடத்திவரும் வடகொரியா தனது ஆறாவது அணு ஆயுதப் பரிசோதனையை மேற்கொள்ளத் தயாராகிவருவதாக அமெரிக்காவும், தென்கொரியாவும் குற்றம்சாட்டி வருகின்றன.

இதனால் கொரிய வளைகுடாவில் பாதுகாப்பற்ற நிலை தோன்றியுள்ளதாகக் கூறி தென்கொரியாவையும் ஜப்பானையும் பாதுகாப்பதற்கென அமெரிக்கா தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை கொரிய வளைகுடாவில் அதிகரித்துள்ளது.

அது மாத்திரமன்றி வடகொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தென்கொரியாவுடன் போர்ப் பயிற்சிகளையும் ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் கொரிய வளைகுடாவிற்கு தனது போர்க் கப்பல் தொடரணியான கார்ல் வில்சன் யுத்த விமானத் தாங்கி போர்க் கப்பல் படையணியையும் அனுப்பி வைத்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த கப்பல் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும் குறித்த கப்பல் தொடரணி அவுஸ்திரேலியா நோக்கி பயணிப்பதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் கார்ல் வின்சன் யுத்தக் கப்பல் தொடரணி கொரிய வளைகுடாவை நோக்கி பயணிப்பதாக பென்டகன் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் யுத்தக் கப்பலை தாக்கி மூழ்கடிப்பதற்கு தமது படைகள் தயாராக இருப்பதாக வடகொரியா பகிங்கமாக எச்சரித்தது.

இதற்கு கடும் ஆத்திரம் வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவசரமாக இது குறித்து சீன அதிபர் ஷீ ஜிங் பின்னுடன் தொலைபேசியில் ஆராய்ந்துள்ளார்.

வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டத்தை கைவிட வைப்பதற்காகவே அமெரிக்கா தனது கார்ல் வின்சன் யுத்தக் கப்பல் தொடரணியை கொரிய வளைகுடாவிற்கு அனுப்பி வைப்பதாகவும் ட்ரம்ப் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது கொரிய வளைகுடாவில் ஏற்பட்டுள்ள பதற்றத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என சீன அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலான அனைத்து நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் சீன அதிபர் அமெரிக்கா மற்றும் வடகொரியாவை வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் வடகொரியத் தலைநகர் பியோங்யேங்கில் கொரிய மக்கள் இராணுவம் உருவாக்கப்பட்டு 85 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது.

உள்ளக அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடகொரியாவின் அனைத்து இராணுவத் தளபதிகள் மற்றும் அரசின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்த போதிலும் அதிபர் கிம் ஜொங் ஹன் கலந்துகொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.