வட,கிழக்கின் முன்னாள் இராணுவ ஆளுனர்கள் எழுதிய நூலை வெளியிட்டார் மகிந்த
முன்னாள் படை அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மற்றும் றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம ஆகியோர் இணைந்து எழுதிய நூலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளியிட்டு வைத்துள்ளார்.
குறித்த நூல் வெளியீடு ஹெக்டர் கொப்பேகடுவ ஆராய்ச்சி நிலையத்தில் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது.
மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மற்றும் றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம ஆகியோர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னாள் இராணுவ ஆளுநர்களாக இருந்துள்ளனர்.
இருவரும் இணைந்து எழுதிய “குழப்பநிலை மற்றும் உறுதிநிலை” வட - கிழக்கு இலங்கையில் போருக்குப் பிந்திய அபிவிருத்தியும், நல்லிணக்கமும் ( “Conflict & Stability” – post war development and reconciliation in NE Sri Lanka ) என்ற தலைப்பிலான இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
போருக்குப் பின்னர், வடக்கிலும், கிழக்கிலும் முன்னெடுக்கப்பட்ட புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக, அந்த காலக்கட்டத்தில் வடக்கின் ஆளுநராக இருந்த மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியும், கிழக்கின் ஆளுநராக இருந்த றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரமவும் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளனர்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய முன்னான் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஸ கருத்து தெரிவிக்கையில்,
“விடுதலைப் புலிகளை தோற்கடித்த பின்னர், வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி, அங்குள்ள மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அனைத்துலக சமூகம் வரவேற்கவில்லை.
வடமாகாண சபை தேர்தலை நடத்த தயாரான போது, அங்கு தேர்தலை நடத்தினால் அதில் தோல்வியடையலாம் என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அதேபோல், அந்த தேர்தலினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம்பெறும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் என்னிடம் கூறினார்.
எவ்வாறாயினும், வட மாகாணசபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே மஹிந்த இருந்தார்.
போரின் பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்து, அந்தப் பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பாரிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன” என்றும் கோத்தபாய குறிப்பிட்டார்.
மேலும், அண்மையில் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்னம் எழுதிய நந்திக்கடலுக்கான பாதை புத்தகத்தையும் மஹிந்த வெளியிட்டு வைத்தார்.
அந்தப் புத்தகத்தில் யுத்தத்தின் போது இடம்பெற்ற பல சம்பவங்கள் குறிப்பிடப்பட்டதோடு, பிரபாகரனின் மரணம் பற்றி ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
இதைத் தொடர்ந்து பல சர்ச்சையான கருத்துக்கள் வெளிவந்து அவற்றுக்கான பதில் கிடைக்காமல் இருக்கும் இந்த நிலையில், மீண்டும் ஒரு புத்தகத்தை மஹிந்த வெளியிட்டு வைத்துள்ளார். இதிலிருந்து எவ்வாறான பூதங்கள் வெளிவரப்போகின்றது என்பதைப்பற்றி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments