Header Ads

எஜமானியைக் காப்பாற்ற தன் உயிரை விட்ட நாய்.. நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவம்


எஜமானியைக் காப்பாற்றிய நாய் தன் உயிரை விட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் சயான் கோலிவாடா பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (23). மெக்கானிக். இவருக்கு, எதிர் வீட்டில் இருக்கும் ஜோதி என்ற பெண் மீது ஒரு தலைக்காதல். அவர் பின்னால் சுற்றி வந்தார். இது ஜோதிக்குப் பிடிக்கவில்லை. இதையடுத்து, ‘தனியாக பேச வேண்டும். கோயிலுக்கு வாயேன்’ என்று ஜோதியிடம் கெஞ்சினார் வெங்கி. ஜோதி தனது அண்ணி ரோஷியை உடன் அழைத்துச் சென்றார்.

கோயிலில் ரோஷியை கண்டதும் கடுப்பானார் வெங்கி. காதலை கைவிடுமாறு சொன்னாராம் ரோஷி. இதனால் வாக்குவாதம் முற்றியது. ஜோதியை தாக்கப் போன வெங்கியை தடுத்தார் ரோஷி. கோபமடைந்த வெங்கி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ரோஷியை குத்தப் போனார். பயந்த அவர் பக்கத்து வீட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டார்.

அது சுமதி என்பவர் வீடு. வெங்கி கத்தியை வைத்துக்கொண்டு நிற்பதை பார்த்ததும் சுமதி, அவனை வெளியே போகச் சொன்னார். வீட்டுக்குள்ளிருந்து கவனித்த சுமதியின் செல்ல நாய் லக்கி, பாய்ந்து சென்று வெங்கியின் காலை கவ்வியது. அவன் கையில் இருந்து கத்தியை தட்டி விட்டு சுமதியை காப்பாற்ற நினைத்தது நாய். இதற்காக அவன் கையையும் கவ்வ முயன்றது. பீதியடைந்த வெங்கி, கத்தியால் நாயை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த நாயை தூக்கி கொண்டு சுமதி அருகிலுள்ள வெட்னரி மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால், நாய் அதற்குள்ளாக இறந்துவிட்டது.

‘எனக்கு ஒண்ணுன்னா, என் செல்லம் லக்கியால தாங்கவே முடியாது. அதை இப்படி கொலை பண்ணின அந்த வெங்கியை சும்மா விடக் கூடாது’ என்று கண்ணீர் மல்கச் சொல்கிறார் சுமதி. அண்டோப்ஹில்ஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.