Header Ads

தினகரன் 6 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட தடை? - தேர்தல் ஆணையத்தின் அடுத்த அதிரடி!


வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிமுக(அம்மா) கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் அடுத்த 6 ஆண்டு காலத்துக்கு தேர்தலில் போட்டியிடாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிமுகவையும் ஆட்சியையும் சசிகலா கோஷ்டி கைப்பற்றிவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு தொடக்கம் முதலே உறுதியாக இருந்து வருகிறது.

முதல்வர் நாற்காலியில் அமர நினைத்த சசிகலாவை உச்சநீதிமன்றம் சிறைக்கு அனுப்பி வைத்தது. இதையடுத்து தினகரன் தலையெடுக்கத் தொடங்கினார். ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதுதான் தினகரனின் திட்டம்.

இதற்காக ஆர்கே நகர் தொகுதியில் எத்தனை நூதன வழிகள் இருக்கிறதோ அத்தனையையும் கடைப்பிடித்து வாக்காளர்களுக்கு லஞ்சம் தந்தார் தினகரன்.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் தினகரனின் தளபதியாக செயல்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இதையடுத்து ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலையே தேர்தல் ஆணையம் ரத்து செய்வதாக அறிவித்தது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட 29 பக்க அறிக்கையில், எப்படியெல்லாம் பணப் பட்டுவாடா நடைபெற்றது என விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதிமுக(அம்மா) அணி வேட்பாளர் தினகரன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி ஆர்கே நகர் தொகுதியில் மட்டுமின்றி எந்த ஒரு தேர்தலிலும் டிடிவி தினகரன் 6 ஆண்டுகாலத்துக்குப் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் டிடிவி தினகரனின் சித்தி சசிகலா 10 ஆண்டு காலத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

தற்போது தினகரனும் 6 ஆண்டுகாலம் போட்டியிட முடியாத நிலை உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.