Header Ads

காதலி முன்பு அடித்ததால் கொன்றோம்... நெல்லை மாணவர் கொலையில் திடுக் வாக்குமூலம


காதலித்த மாணவி முன்பு அடித்து உதைத்ததால் கொலை செய்ததாக, நெல்லை பிளஸ் டூ மாணவர் கொலையில் கைதான சகமாணவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். வல்லநாடு அருகே படுகையூரை சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் வெங்கடேஷ். இவர் திருநெல்வேலியில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் நல விடுதியில் தங்கி, ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று மாலை விடுதியின் வெளியே மர்மநபர்களால் வெங்கடேஷ் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். வெங்கடேசின் அலறல் சத்தம் கேட்டு விடுதி மாணவர்கள் மற்றும் வார்டன் ஆகியோர் ஓடி வருவதற்குள், கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவலறிந்த போலீசார், 

சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், காதல் தகராறில் வெங்கடேஷை அவரது வகுப்புத் தோழர்கள் இருவரே திட்டமிட்டுக் கொலை செய்தது தெரிய வந்தது. 

அதனைத் தொடர்ந்து, சுந்தர் என்ற மாணவரையும், அவருடைய உறவினர் செல்வம் என்ற செல்வவினோத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைதான சுந்தர் அளித்த வாக்குமூலமாவது:- நானும், வெங்கடேசும் ஒரே வகுப்பில் படித்து வந்தோம். நாங்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் சமுதாய மாணவர்கள் எனக்கு ஆதரவாகவும், வெங்கடேசின் சமுதாய மாணவர்கள் அவனுக்கு ஆதரவாகவும் இருப்பது வழக்கம். 

எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். மேலும் பள்ளிக்கூடத்தில் எங்களது சமுதாயம் பற்றிய தகவல்களை எழுதி போடுவதில் எங்களுக்கு இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. அதில் இருந்தே எங்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நான் எங்கள் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்தேன்.

அதே மாணவியை அவனும் காதலித்தான். இதனால் இருவருக்கும் பிரச்சினை அதிகமானது. நான் அவனை, அந்த மாணவியிடம் பேசக்கூடாது என்றேன். அவன் என்னை பார்த்து, நீ அவளிடம் பேசக்கூடாது என்றான். இதனால் நேற்று முன்தினம் எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் வைத்து வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் வந்து நான் காதலித்த மாணவி முன்பு என்னை அடித்து உதைத்தான். இது எனக்கு பெருத்த அவமானமாகி விட்டது. எனக்கு பல்வேறு வகையிலும் இடையூறாக இருக்கும் அவனை தீர்த்து கட்ட வேண்டும் என்று நான் திட்டமிட்டேன். எனது திட்டத்தை பழக்கடையில் வேலை பார்த்த எனது உறவினர் செல்வவினோத்திடம் கூறினேன். 

அவர் எனக்கு உதவி செய்வதாக கூறினார். இதனையடுத்து இரவு 7 மணிக்கு விடுதியில் மாணவர்கள் சாப்பிடுகிற நேரத்தில் நாங்கள் இருவரும் அரிவாளுடன் சென்று வெங்கடேசை வெட்டிக்கொன்று விட்டு தப்பி ஓடி விட்டோம். நள்ளிரவில் அழகநேரியில் நாங்கள் மறைந்து இருந்தபோது போலீசார் எங்களை பிடித்து கைது செய்து விட்டனர்" எனத் தெரிவித்துள்ளார். 

காதல் விவகாரத்தால் பள்ளி மாணவர் சக வகுப்புத் தோழனை கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.