Header Ads

கதிகலங்க வைத்த மேற்கிந்திய தீவுகள்! இலங்கை அணி படுதோல்வி


முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை, ஜிம்பாப்வே,மேற்கிந்திய தீவுகள் ஆகிய 3 அணிகள் ஜிம்பாப்வேயில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில்விளையாடி வருகிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று நடந்த போட்டியில் இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் விளையாடியது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்கா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களமிறங்கி விளையாடியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய சார்லஸ் (2), காரிக் பிராத்வெய்ட் (14) நிலைக்கவில்லை.

இதன் பின்னர் வந்த லிவிஸ் 27 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சாய் கோப் (47) அரைசதத்தை தவறவிட்டார்.

தொடர்ந்து தடுமாற்றத்தில்இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியை ஜோனாதன் கார்டர், ரோவ்மன் பொவல் ஜோடி ஓரளவு மீட்டது.

ஜோனாதன் கார்டர் (54) அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரோவ்மன் பொவல் 29 பந்தில் 44 ஓட்டங்கள்எடுத்தார்.

இதன் பின் வந்தவர்கள் நிலைக்கவில்லை. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 49.2 ஓவரில் 227 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இலங்கை அணி சார்பில், குலசேகரா, சுரங்க லக்மல், நுவன் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டை கைப்பற்றினார்கள்.

பின்னர் 228 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியது.

ஆனால் தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இலங்கை வீரர்கள் அதிர்ச்சி கொடுக்க ஆரம்பித்தனர்.

இதனால் 43.1 ஓவரிலே இலங்கை அணி 165 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஷேகன் ஜெயசூரியா 31 ஓட்டங்களும், சச்சித் பதிரான 45 ஓட்டங்களும் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள்அணி தரப்பில், கப்ரீல், அஸ்லி தலா 3 விக்கெட்டுகளையும், ஜாசன் ஹொல்டர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

No comments

Powered by Blogger.